1. தண்ணீர்க்கு ரத்தம்சிந்தும் நிலையின்றிங்கே --- இதற்குத்
தானோநாம் போராடிச் சுதந்திரம் பெற்றோம் ?
உண்மையில் நாட்டிற்கே வெட்கக்கேடு --- இதனால்
உருக்குலையும் நாடிதனின் ஒருமைப் பாடும் !
கண்ணியத்தை கன்னடியர் காத்திடவேண்டும் --- கொண்டக்
கடமையெனத் தீர்ப்புதனை ஏற்றிட வேண்டும் !
உண்மையிலே ராமையாவைப் போற்றிடவேண்டும் --- நாட்டின்
உச்சநீதி மன்றத்தீர்ப்பை மதித்திடும் போக்கால் !
2 . நீரைப்பெறப் போராட்டம் தமிழகந்தன்னில் --- அந்த
நீரைத்தடுக்கப் போராட்டம் கன்னடம் தன்னில் !
கூர்கெட்டோர் என்றாக ஆகவுந்தகுமோ --- இந்தக்
குவலயமே நமைகண்டுச் சிரித்திடத் தகுமாம் !
யார் இதற்குப் பின்னாலெனக் கண்டிடவேண்டும் --- அவனை
இன்னாட்டை விட்டேநாம் துரத்திட வேண்டும் !
சீர்கொண்ட மரபினராம் இந்தியரென்ற --- நிலமை
சிதறிடவே காணுவதுக் கொடுமையுந் தானே !
3. நதிநீரைப் பகிர்வதுவே முறையென்றாகும் --- இந்திய
நாட்டுமக்கள் ஓர்குலமென உணர்ந்திட வேண்டும் !
மதிகெட்டோர் தாம்நீரைத் தமக்கெனக்கொள்வார் --- அவர்
மனுநீதி தனையுணரா மக்களென் றாவார் !
சதிசெய்தே அதைத்தடுக்க எண்ணிடுவோரை --- முச்
சந்தியிலே நிறுத்திட்டுத் தண்டிக்க வேண்டும் !
அதிபுத்தி சாலியெனப் பேசிடுவோரை --- அரசும்
அடக்குவதே கடமையென உணர்ந்திட வேண்டும் !
4. அமைதியதும் கெடத்தகுமோ நாட்டினிலே --- இந்த
ஆபத்தைநாம் உணராமல் இருப்பதுவோ ?
நமைஆளத் தெரியாதார் எனச்சர்ச்சில் --- சொன்னதை
நாமின்று உண்மையென்றும் ஆக்குவதோ ?
இமையதுவாய் அமைதிதனைக் காப்பதுவே --- நம்
எல்லோரின் கடமையென்றே உணர்ந்திடுவோம் !
சுமையதுவாய் நாம்பிறரைக் காண்பதுவோ --- நாமெலாம்
சொந்தமென்ப தெல்லாமும் பொய்தானோ ?
5. இந்தியர் நாமெல்லாம் ஓர்தாயின் மக்கள்
என்றிட்ட எண்ணம் மக்களுக் கில்லை !
எந்தவோர் நிலையிலும் கடமைதனை உணரும்
எண்ணமது சிறிதேனும் இதயமதில் இல்லை !
நிந்திக்கத் தக்கதே நாம்போகும் போக்கு
நிச்சயம் நாடிதன் நலனுக்குத வாதாம் !
சிந்தித்து நாமெலாம் மனந்தெளிய வேண்டும்
சீர்பெருமை தனைகாக்க நாம்முனைய வேண்டும் !
6. கன்னடியர் செய்வதெலாம் நியாயமதும் தானோ ?
கண்டதனை தீயிட்டுக் கொளுத்திடவும் தகுமோ ?
இன்னதென்ன விளையாட்டோ அவர்களுக் கெல்லாம்
இழிவான செயலிதனைச் செய்திடவும் தகுமோ ?
என்னவொரு ஆணவந்தான் மன்றத்தின் தீர்ப்பை
ஏற்காமல் ஆர்ப்பாட்டம் செய்கின்ற தெல்லாம் ?
உன்னதமோ , அமைதிக்கிது உகந்ததுவும் தானோ ,
உலகமே நமைக்கண்டு இழித்துரைக்கத் தகுமே !
7. ஆண்டாண்டுக் காலமதாய் கர்னாடகம் வஞ்சிக்கும்
அநியாயம் தன்னைநாம் பொறுத்திடவும் தகுமோ ?
வேண்டாதப் போராட்டம் தனைசெய்யும் அவர்கள்
விளைவினை சிறிதேனும் எண்ணிடுதல் வேண்டும் !
மாண்புற்ற மக்களே அவர்களெனும் போதில்
மன்றமதன் ஆணைதனை மதித்திடல் வேண்டும் !
காண்கின்ற அராஜகம் வேண்டாத ஒன்றாம்
கடமையென தீர்ப்பினை ஏற்பதே நன்றாம் !
8. காவேரி மேலாண்மைக் குழுசெய்த தென்ன
கடமைதனை உணராமல் இருப்பதும் தானோ ?
பாவிகட்கு தமிழகத்தின் தேவைதெரி யாதோ ,
பாரா முகங்காட்டி இருக்கவும் தகுமோ ?
சேவைமனப் பான்மைதனை கொண்டிட்டு அவர்கள்
சிறப்புற ஆணைதனை நிறைவேற்ற வேண்டும் !
மேவியபல் ஆறுகள் நாடெங்கும் உண்டாம்
மேளாண்மை கொண்டவர்கள் செயல்புரிதல் நன்றாம் !
9. சட்டம் ஒழுங்கு நாட்டினிலே நிலைபெற வேண்டும்
சத்தியத்தை மக்களெல்லாம் மதித்திட வேண்டும் !
திட்டமிட்டு அரஜகந் தன்னைச் செய்வோர்
தேசமிதன் துரோகிகளென ஒதுக்கிட வேண்டும் !
நட்டமதே இவர்களினால் நாட்டுக் கென்றும்
நலமதனைக் காணாதாம் நாடிது என்றும் !
விட்டுவைக்கத் தக்கவரோ இவர்கள் எல்லாம் ,
வீணர்களால் பயனில்லை , உண்மையும் தானே !